ஓய்வு

https://www.youtube.com/watch?v=1bLQ7BU9BkI

https://www.youtube.com/watch?v=pTHDMc-ouH0&t=407s

https://www.youtube.com/watch?v=GKe3P1p-Kjw

https://www.youtube.com/watch?v=d-QOhcUSdlU

ஒரு தொழிலிலிருந்தோ, ஒரு வேலையிலிருந்தோ ஓய்வு பெறுவது என்பது நமக்கு அளிக்கப்படும் நல்ல காலம் ஆகும்.

ஓய்வு பெற்றவுடன், பெரியவர்கள், சீவாத தலை, கிழிந்த பனியன், அழுக்கு வேட்டி என்று மாறிவிடுவார்கள். ஷூ போடுவதை நிறுத்தி விடுவார்கள்.

நாம் செய்த வேலையை எப்படி மனதார விரும்பி வாழ்ந்தோமோ, அப்படி நமக்கான நேரத்தை காதலித்து செலவு செய்ய வேண்டும் இல்லையா. பிடித்தது போல் நல்ல அழகாய் உடை அணியுங்கள்.

சில நண்பர்கள், ஓய்வு பெற்ற பிறகும் உடம்பில் சக்தி இருக்கும் வரை வேலைக்கு போகலாம் என்று கையில் அதிகம் காசிருந்தும், மீண்டும் வேலையை எங்கோ தேடிக்கொண்டு தொடர்வதை மட்டும் பார்க்க முடிகிறது.

அது ஏன் என்று மட்டும் புரிவதே இல்லை. மீண்டும் இந்த பணத்தை சேர்க்க யாருக்காக துரத்துகிறீர்கள். மூப்பிலும் தினம் உழைத்தால்தான் சோறு என்ற வாழ்க்கை சிலருக்கு மட்டும் சபிக்கப்பட்ட அல்லது சிறு வயதில் தவறு எங்கோ நடந்துவிட்டதின் தொடர்ச்சியாக வேண்டுமானால் இருக்கலாம்.

ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அப்படிப்பட்ட நிலைமை இல்லை. இருந்தாலும் அந்த பணத்தை நோக்கி துரத்தி கொண்டு ஓடுகிறார்கள். ஓய்வுக்கு பின் நமக்கானா வாழ்க்கையை இனியாவது வாழ்வோம் என்று கொஞ்சமும் ஆசை இல்லாமல்.

உங்களுக்கு பிடித்த வேலையை சமயத்தில் செய்ய முடியாததை செய்யுங்கள். உங்களுக்கு குருவிகளுக்கு கூடு கட்டுதலோ, மரம் நடுதலோ ஆசையாக இருக்கலாம். உங்களுக்கு கதை, கட்டுரை, ஆன்மீகம் இப்படி எதையாவது செய்யலாம்.

இதுவரை ஓடிய நாட்களில் பார்க்க முடியாத இடங்களை பாருங்கள். காலை உணவை நிதானமாய் ரசித்து உண்ணுங்கள். மதியம் இரவு  நேரத்துக்கு நன்றாக தேவையான செரிமானம் ஆகக்கூடிய  உணவை சாப்பிடுங்கள்.

கொஞ்சம் நம்முடைய பழைய நண்பர்கள், உறவுகளுடன் மனம் விட்டு பேசுங்கள். இதில் அவர்கள் பேசவே செய்வதில்லை. நாமே பேசுகிறோம் என்று ஈகோ பார்க்க வேண்டாம்.

அதிகாலையில் எழுந்திருங்கள் வாய் விட்டு நிறைய சிரியுங்கள். உங்கள் காலத்து நண்பர்களோ, பிடித்த, கூட வேலை செய்தவர்களோடு மாதம் ஒரு முறையாவது மறக்காமல் எல்லாவற்றையும் பேசுங்கள் அல்லது அவர்களை நேரில் சந்தியுங்கள் .

மிக மிக நெருக்கமான, நம்பிக்கையானவர்களிடம் மட்டும் உங்கள் சுகத்தையும், துக்கங்களையும் பகிருங்கள். அப்படி இருந்தால் நம் துக்கம் ஒன்றுமில்லை என்று நமக்கு தெரியும்.

தேவையான உடற்பயிற்சியினை இயன்றவரை செய்துவிடுங்கள். நேரத்துக்கு மருந்தை உட்கொள்ளுங்கள். நம் நண்பர்கள், நம் உறவினர்கள் எங்கோ ஒருவர் இறப்பார்கள். அடுத்து நாம் தான் என்று ஒருபோதும் பயப்படாதீர்கள். அந்த வரிசை இயற்கையிடம் மட்டுமே இருக்கிறது.

டாய்லெட் கதவுகளை பூட்டிக்கொள்ளாதீர்கள். தலையணைக்கு அருகில் மொபைல், டார்ச், சாவி வைத்துக் கொள்ளுங்கள்.

தெரியாதவர்களுக்கு கதவைத்திறக்காதீர்கள்.

சேர்த்துவைத்த பணத்திற்காகவோ, பென்ஷன் பணத்திற்காகவோ, ஒன்று விட்ட, இரண்டு விட்ட உறவினர்கள் சொந்தம் கொண்டாடினால், காபி கொடுத்து அனுப்பி விடுங்கள். இருக்கும் பணத்தை சாமர்த்தியமாய் வங்கியில் போட்டு வருமானத்திற்கு வழி செய்து கொள்ளுங்கள்.

பேரக்குழந்தைகளுடன் விளையாடுங்கள். உங்களை அவர்களுக்குள் பார்க்கலாம்.

வேலையை விட்டுத்தானே ஓய்வு பெற்றோம். இறந்தா போய்விட்டோம் இல்லையே. அப்புறம் ஏன் கவலைபடுகிறீர்கள்

இவை அனைத்தும் ஓய்வு பெற்ற பெரியவர்களுக்கு மட்டும் அல்ல. அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கும் சேர்த்து தான்.

ஓய்வு பெற்ற தங்களது பெற்றோர்களுக்கு உரிய மரியாதையையும், சுதந்திரத்தையும், அவர்களின் ஓய்வில் எவ்வித மன உளைச்சலும் ஏற்படுத்ததாத வகையில் பெற்றோர்களின் உடல், மன நலன் கருதி பிள்ளைகளும் நடந்து கொள்வது அவர்களின் வாழ்க்கையில் ஈடற்ற மகிழ்வையும், ஆரோக்யத்தையும் அளிக்கும்.

வாழ்வியல் போராட்டத்திற்காக ஓடிய ஓட்டத்தில்  பணி ஓய்வு என்பது அடிபணிந்து, சகித்து, பொறுமை காத்து, அவமானப்பட்டு, குடும்பத்திற்காக ஒரு சுமைதாங்கியாக தங்களது வாழ்வை அர்ப்பணித்த ஒவ்வொருவருக்கும் மிச்சமிருக்கும் வாழ்க்கையை ரசிக்க இந்த சமூகம் நமக்களித்த வரம் இது.


Comments

Popular posts from this blog

தீபாவளி பலஹாரங்கள் Deepavali snacks

ஆதித்தியன் சூரியன் Sun Solar

60s, 70s and 80s Brain skill